உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை கடந்த சில நாட்களுக்கு முன் 3.30 லட்சம் கோடிக்கு வாங்கினார். இதற்காக டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில், ‘இனி வரும் காலங்களில் டிவிட்டரை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்த முடியாது. அதைப் பயன்படுத்த சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு தற்போது போன்று இலவசமாக சேவை கிடைக்கும். அவர்கள் வழக்கம்போல் டிவிட்டரை பயன்படுத்தலாம். அதே நேரம், வர்த்தக நிறுவனங்கள், அரசு நிறுவனங்களிடம் இருந்து அவர்கள் பதிவிடும் டிவிட்டுக்கு சிறிய அளவிலான கட்டணத் தொகை வசூலிக்கலாம் என்று முடிவு எடுக்கபட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, டிவிட்டரை வாங்கியது தொடர்பாகவும், அதன் விதிகளில் செய்ய இருக்கும் மாற்றங்கள் குறித்தும் எலான் மஸ்க் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இங்கிலாந்து நாடாளுமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கு இ-மெயிலில் பதிலளித்த எலான் மஸ்க், டிவிட்டரின் விதிமுறைகள் பற்றி இப்போது கருத்து கூறுவது சரியல்ல,’ என்று தெரிவித்துள்ளார்.